Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, February 13, 2012

சாகப் போகும் கணவனுக்காக, பிரசவ வலியை...

நம் நாடு, மேல்நாட்டு மோகத்தில் தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில், ஒரு பெண் தன் கணவன் உயிர் இன்னும் ஒரு வாரத்தில் பிரியப் போகிறது என்று தெரிந்ததும் தன் பிரசவ வலியை முன்னுக்குத் தள்ளிப் போட்டு,  பிறந்த அக்குழந்தையை கணவனின் கைகளில் கொடுத்து சந்தோஷப்படுத்திய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதன் லிங்க் இங்கே.
http://digg.com/newsbar/topnews/texas_woman_induces_labor_two_weeks_early_so_her_dying_husband_could_hold_the_baby

Wednesday, November 2, 2011

மீடியாக்களின் மனிதாபிமானம்

நேற்று உண்மைக் கதைகளை ஒளிபரப்பும் ஒரு தமிழ் சேனலில் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதையை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணும் தான் ஏமாந்த கதையை பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். ஒருவன் அந்தப் பெண்ணைக் கெடுத்து கையில் குழந்தையையும் கொடுத்து அனாதையாக்கி விட்டது பார்ப்பவர்களை உண்மையிலேயே மனம் கொதிக்க வைத்தது. பேட்டி எடுத்தவரும் வழக்கமான தன் வண்ண வண்ண உடைகளோடு கேள்விகளைப் போட்டு விஷயங்களை வாங்கிக் கொண்டிருந்தார். லட்சுமிக்கு சரியான மாற்று இவர். பல வீட்டு வண்டவாளங்கள், இவர் மூலம் தண்டவாளங்கள் ஏறி இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி என்றைக்கு விபரீதமாகப் போகிறதோ தெரியவில்லை. பிறகு  முக்கியமான கட்டத்தில் சீரியல் போல தொடரும் போட்டு விட்டார்கள். அதற்கு அப்புறம் நடந்ததுதான் டாப். 


இன்றைய கேள்வி.
இந்தப் பெண்ணை ஏமாற்றியவன் பெயர்
1. ராமசாமி
2.குப்புசாமி
3.மாடசாமி
சரியான விடையை எஸ்.எம்.எஸ் செய்பவருக்கு.....

இதென்ன கேம் ஷோவா! அடச்சீ தமிழ்


Saturday, August 20, 2011

நேர்மைத் திறமுமின்றி

அன்னா ஹசாரேவுக்குப் பின்னால் திரண்ட வட இந்தியக் கூட்டத்தையும், கொஞ்ச நாளைக்கு முன்னால் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நம் தமிழ்நாட்டுக் கூட்டத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். அதன் ஆவேசத்தில் கால்பங்கு கூட இங்கு இல்லையே. இங்கு போனால் போகிறதென்று கோர்ட் உத்தரவு போட்டதால் நாம் தப்பித்தோம். ஆனால் அங்கு கோர்ட்டையே உத்தரவு போட வைக்கிறார்கள். நம் மக்களுக்கு நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொஞ்சம் குறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராக எனக்குத் தெரிந்தவரை பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் சிலரைத் தவிர தீவிரமாய் செயல்பட்டவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. பார்க்கப் போனால் மக்களின் ஆவேசத்தை விட பள்ளி நிர்வாகிகளின் 'தர்ம' ஆவேசம் அதிகமாக இருந்தது. அப்போது நம் மக்கள் எவ்வளவு கிள்ளுக் கீரைகளாக இருந்திருக்கிறார்கள்.  சகிப்புத் தன்மை அதிகமானதால் நம் ஆயுதங்கள் மழுங்கி விட்டன. ஆனால் சகிப்பின்மை அதிகமானபோது காந்திக்கு அஹிம்சையும் ஆயுதமானது.
 நாம் ஹிந்தி கற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் சில விஷயங்கள் ஹிந்தியைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டுமோ!

Monday, April 11, 2011

சுனாமியால் அழியாதவை

சுனாமிக்குப் பிறகு ஜப்பானில் லூட்டிங் எனப்படும் கொள்ளைகள் (ஆளில்லாத கடைகளில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடுவது) நடைபெறவில்லை என்பதை எனது முந்தைய பதிவில் பார்த்தோம். இப்போது இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது.

சுனாமி ஏரியாக்களில் கண்டெடுக்கப்படும் தொலைந்து போன பொருட்களைத் திருப்பிக் கொடுக்கப்படுவது (அதுவும் போலீஸ் ஸ்டேஷனில்(!)) அதிகரித்து உள்ளது. திருப்பிக் கொடுக்கப்பட்ட பொருட்களால் குடோன்கள் நிரம்பி உள்ளது.
தொலைந்து போன பொருட்களை முக்கியமாக பணத்தை உரியவரிடம் திருப்பிச் சேர்க்கும் பணி போலீஸுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை(!). ஏதாவது பர்ஸ் அல்லது wallet இருந்தால் அட்ரஸ் ஓரளவுக்கு கண்டு பிடித்து விடலாம். ஆனால் வெறும் பணமாக இருந்தால் அது ரொம்ப கஷ்டமாக இருக்கிறதாம். அதையும் மீறி 10% பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

அங்கு ஒரு சட்டம் உண்டு. மூன்று மாதத்துக்குள் யாரும் பணத்தை கிளெய்ம் பண்ணவில்லையென்றால், யார் கண்டு பிடித்துக் கொடுத்தாரோ அவரே திரும்ப வாங்கிக் கொள்ளலாம். அந்த திரும்ப வாங்கும் உரிமையையும் பல பேர் ரத்து செய்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு அந்தப் பணம் உயர் அதிகாரிகளிடம் அனுப்பப்பட இருக்கிறது. அது போக கிடைத்திருக்கும் unclaimed லாக்கர்கள் இன்னும் உடைக்கப்படவில்லை. அவைகளுக்குள் ஏகப்பட்ட நகைகள், ஷேர்கள், சொத்துப் பத்திரங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் ஊகிக்கிறார்கள். அவற்றை எல்லாம் என்ன செய்வது என்று இன்னும் முடிவாகவில்லை.
ஜப்பானுக்கு அன்னா ஹஸாரேக்கள் அதிகம் தேவைப்படாது போலிருக்கிறது. அது போல ஒரு சந்தேகம். அங்கு ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுத்தால் வாங்குவார்களா?

Wednesday, March 16, 2011

சுனாமியிலும் நேர்மை

நம் ஆட்கள் சுனாமியிலும் ஸ்விம்மிங் போவோம் என்று வாய்ச் சவடால் அடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜப்பானில் ஒரு விஷயம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இந்த மோசமான நிலையிலும் அங்கு கடைகளிலும் மற்ற இடங்களிலும் லூட்டிங் எனப்படும் கொள்ளை நடைபெறவே இல்லையாம். ஜப்பானியர்களின் இந்த நேர்மைக்கான காரணத்தை மற்ற நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. இதற்கும் அங்கு அராபிய நாடுகளைப் போல கடுமையான தண்டனை முறைகளும் இல்லை. இதற்கு அவர்களது கலாச்சார முறைதான் காரணம் எனக் கூறுகின்றனர். தங்கள் நாடு என்ற பெருமை, சுயமரியாதை என்பவை எல்லாம் அங்கு உண்மையிலேயே இருக்கும் போல இருக்கிறதே! இவற்றை நம் ஆட்களுக்குக் கொஞ்சம் கடன் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Tuesday, February 22, 2011

வேதனை அளிக்கும் எட்டாவது அதிசயம்

உலக புராதான கழகம் எட்டாவது அதிசயமாக எதை அறிவித்து இருக்கிறது தெரியுமா?
மனிதன் இதுவரை உருவாக்கியவைகளிலேயே மிகவும் தாக்குப் பிடிப்பது மட்டும் அல்லாமல் வேகமாக வளர்ந்து வரக் கூடியதும், அதே சமயத்தில் நாம் பெருமைப்பட முடியாததுமாக இது இருந்து வருகிறது.

மற்ற ஏழு அதிசயங்களும் இதன் கம்பீரத்துக்கு முன்னால் கை கட்டி நிற்க வேண்டியதுதான்.

பல தலைமுறைகளாக இதன் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியை நாம் வியப்போடும் வேதனையோடும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பல ஜாம்பவான்கள் இதை அழிப்பதற்காக படை எடுத்து தோற்றுப் போயிருக்கிறார்கள்.

இதைத் தொடங்கி வைத்தவர்கள் யூதர்கள் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு தலைமுறையிலும் இது வளர்ந்து கொண்டே வருவது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.

இந்தத் தலைமுறையில் இதன் வலிமை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் இம்முறை பல்லாயிரக் கணக்கான மக்களின் துணையுடன்(அழிவுடன்) இது வீழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் வளர்ச்சியை கீழ்க்கண்ட வரைபடத்தில் பாருங்கள்.


அந்த எட்டாவது அதிசயம் பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள இடைவெளிதான்.




Monday, February 7, 2011

அமெரிக்காவிலேயே இப்படியா!

பெனிசில்வேனியாவில், மதநம்பிக்கை காரணமாக குழந்தையை டாக்டரிடம் காட்டாமல் கொன்ற ஒரு தம்பதிக்கு கோர்ட் தண்டனை வழங்கி உள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 12 குழந்தைகள் பெற்றோரின் மத நம்பிக்கை காரணமாக டாக்டரிடம் காட்டாததால் இறக்கின்றனர். மத சுதந்திரம் என்ற பெயரால் நடைபெறும் இந்த முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று எல்லோரும் விரும்புகின்றனர். மேலும் படிக்க http://www.good.is/post/should-families-that-believe-in-faith-healing-be-prosecuted-when-their-children-die/

Friday, February 4, 2011

2G

. ஆனந்த விகடனில் வந்த அருமையான கட்டுரை. முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
Sivakumar.M

மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாய கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

சிவகுமார்.M
சீனியர் எஞ்சினியர்

Tuesday, August 17, 2010

இன்று உமாசங்கர் தினம்

இன்றைய தினம் ஏன் நேர்மையான அதிகாரிகளின் தினமாகக் கொண்டாடக் கூடாது? அதுதான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை. அதுமட்டுமல்ல, அதுதான் அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டவும் சிறந்த வழி.
அன்னையர் தினம்
ஆசிரியர் தினம்
மாணவர் தினம்
உமாசங்கர் தினம்.
இதுதான் நேர்மையான அதிகாரிகளை ஊக்குவிக்கும்.

Tuesday, July 27, 2010

இன்னொரு தாரே ஜமீன் பர்

டிஸ்லெக்சியாவினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கதை போல ஒரு உண்மைக்கதையை யூ ட்யூப்பில் பார்க்க நேர்ந்தது. இதில் வரும் பெண்ணுக்கு ஆட்டிசம் என்ற நோய். தனக்கு என்ன நேர்கிறது என்பதை அந்தப் பெண் டைப் அடித்து சொல்வதையும், அவள் பெற்றோர்களின் தியாகத்தையும், பார்த்துதான் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணீர் வந்து விடும். Link
http://www.youtube.com/watch?v=jq--75v4lI8. பொறுமையாக கடைசி வரை பார்க்கவும். இது ஒரு digg recommendation.

Sunday, October 18, 2009

குடியின் மறுபக்கம்

டாஸ்மார்க்கின் விற்பனை அமோகம் என்ற புள்ளிவிவரங்களுக்கு நடுவில்
, நேற்றும் முன்தினமும் குடித்துவிட்டு மூன்றுபேர் தற்கொலை செய்துள்ள விவரம் தினத்தந்தியில் வந்துள்ளது.
ஆவடியில் குடிபோதையில் போலீஸ்காரர் தீக்குளித்து சாவு.
தீபாவளியைக் குடும்பத்துடன்கொண்டாட முடியாத ஏக்கத்தில் வியாபாரி தற்கொலை.
குடித்துவிட்டு வேப்பமரத்தில் தூக்குப் போட்டு சாவு, மகனின் பிணத்தை சாக்குமூட்டையில் கட்டித் தூக்கி வந்த தந்தை.
மேல் சொன்ன எல்லாவற்றுக்கும் குடிப் பழக்கம்தான் காரணமாக இருந்திருக்கிறது. பிரச்னைகள் நிறைந்துள்ள நம் நாட்டில் குடி தேவையில்லாத ஒன்று என்றுதான் தோன்றுகிறது. நல்லவேளை. பெண்களுக்கு இப்பழக்கம் இல்லை!
எல்லாவற்றிலும் அட்வான்ஸாக இருக்கும் ஃபாரின்காரர்களுக்கு இது பெரிய பிரச்னை இல்லை. அவர்கள் அதிலும் அட்வான்ஸாகப் போய்போதைப் பிரச்னையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேனுக்குள் விழுந்து திகைக்கும் எறும்புகள். ஆனால் நாம் இன்னும் புழுக்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் குடிப்பதைப் பற்றி ஜாலியாக ஹேங்க் ஓவர் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாம் தேவையில்லாமல் காப்பியடித்தால் நாமும்
hang(to death)overதான்.

Thursday, July 16, 2009

பிராமின்ஸ் ஒன்லி

வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.